சென்னை: சட்டப்பேரவைக்கு வந்த எதிர்கட்சி தலைவரும் திமுக செயலருமான மு.க.ஸ்டாலின் வாகனத்தை போலீஸார் சோதனை செய்ததற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை (பிப்.18) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இதையடுத்து மிகுந்த சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்குப் பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதால், அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்காக சட்டப்பேரவை வளாகம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள திமுக எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர். அப்போது, பேரவை வளாகத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.,க்களின் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனைக்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஸ்டாலின் கார் சோதனை செய்யப்பட்டதற்கு திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவிக்கும் வகையில்கோஷம் எழுப்பியவாறு பேரவைக்குள் சென்றனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.