அதிமுக அரசை கலைக்கும் எண்ணத்துடன் திமுக செயல்பட்டது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை பெரும்பான்மையை நிரூபித்த அவர், மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதி, எம்ஜிஆர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா எடுத்த சபதம் நிறைவேறியுள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சி மலர்ந்தது. மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் கனவுகளை நிறைவேற்றுவதே அரசின் குறிக்கோள். மக்களின் குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை அளிப்போம்.
அதிமுக அரசை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திமுக செயல்பட்டது. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார்கள். வறட்சி குறித்து புள்ளிவிவரங்களைச் சேகரித்த பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரிய நிதி பெறுவோம். "நீட்' தேர்வு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்படும் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.