அதிமுக கொறடா ராஜேந்திரனின் உத்தரவுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களின் மீது கட்சித்தாவல் தடை சட்டம் பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆளும்கட்சி சார்பில் பேரவைத் தலைவரிடம் அதுகுறித்து கடிதம் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் பேரவைத் தலைவர் மூலமாக விளக்கம் கோரப்படும். இதன் பிறகே, அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டம் பாய்ந்து பதவி பறிபோக வாய்ப்பு ஏற்படும்.
ஆனால், இதுவரை ஆளும்கட்சி சார்பில் அத்தகைய கடிதங்கள் ஏதும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம், அவருக்கு ஆதரவு அளித்த பாண்டியராஜனைத் தவிர மற்ற ஒன்பது உறுப்பினர்களின் இருக்கைகள் ஏதும் மாற்றப்படவில்லை. அவர்கள் அதிமுக உறுப்பினர்களுக்கு அருகிலேயே அமர்ந்திருந்தனர்.
இதனால், அவர்கள் மீது ஆளும் கட்சி சார்பில் எந்தவொரு நடவடிக்கைக்கும் வாய்ப்பில்லை என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன் மீது நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.