பேரவையில் திமுக உறுப்பினர்கள் வரலாறு காணாத அமளியை அரங்கேற்றிய போதும், ஆளும்கட்சியைச் சேர்ந்த 122 உறுப்பினர்கள் மௌனம் காத்தனர்.
வாக்கெடுப்பு முடியும் வரை அவர்கள் யாரும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஆளும்கட்சித் தரப்பில் இருந்து யாரும் எதையும் பேரவையில் பேசவில்லை.
வாக்கெடுப்பின் போது மட்டும் அவர்கள் எழுந்து நின்றனர். மற்றபடி அவர்கள் தங்களது இருக்கைகளை விட்டு எழுந்திருக்கவே இல்லை. கடும் கலவரங்கள், கேலி, கிண்டல்கள் என திமுக தரப்பில் இருந்து பல்வேறு சம்பவங்கள் அரங்கேற்றப்பட்ட போதும் அதற்கு எந்த பதிலடியையும் காட்டாமல் காரியமே பெரிது, வீரியம் பெரிதல்ல என்ற சொல்லுக்கு ஏற்றாற்போன்று வாக்கெடுப்பு வெற்றி பெறும் வரை அமைதி காத்தனர்.
122 வாக்குகளுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன், அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி மகிழ்ச்சி பொங்க வரவேற்பு தெரிவித்தனர்.