புதுக்கோட்டையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர் கனகராஜை கொலை செய்ததாக, சந்தேகத்தின் பேரில் 7 பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை நரிமேடு அருகே, தைலமரக் காட்டில் ரத்தக் காயங்களுடன் இறந்த கிடந்த 30 வயதுள்ள இளைஞரின் சடலத்தை டவுன் டிஎஸ்பி- எஸ். பாலகுரு தலைமையிலான போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். திருக்கோகர்ணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அங்கு கிடந்த செல்போன் மூலம், இறந்தவர் மதுரை மாவட்டம், பறவை கிராமத்தைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர் கனகராஜ் (30) என்று தெரியவந்தது.
இதையடுத்து கனகராஜின் மனைவி சுதா, தந்தை முருகேசன், உறவினர் ஹேமா ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டு, புதுக்கோட்டைக்கு வந்தவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். இதையடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் அதை மதுரைக்கு கொண்டு செல்லாமல் புதுக்கோட்டையில் உள்ள மாயனத்தில் தகனம் செய்துவிட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து, கனகராஜின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், புதுக்கோட்டை போலீஸார் மதுரையைச் சேர்ந்த வேல்முருகன், சக்திவேல் உள்பட 4 பேரையும், இவர்கள் அளித்த தகவலின்படி புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், பெரியார் நகரைச் சேர்ந்த நந்தகுமார், பாலாஜி உள்பட மொத்தம் 7 பேரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.