சபாநாயகர் தனபாலுக்கு வைகோ பாராட்டு..!

நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டப்பேரவையிலும் ரகசிய வாக்கெடுப்புக்கு இடமே இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சபாநாயகர் தனபாலுக்கு வைகோ பாராட்டு..!

சென்னை: நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டப்பேரவையிலும் ரகசிய வாக்கெடுப்புக்கு இடமே இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அறிக்கை வெளியாகியுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவையில் தமிழக சட்ட விதிமுறைககளின் படிதான் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது என பேரவைத் தலைவர் தனபால் கூறியபோதும், எதிர் கட்சியான திமுக-வினர் நடத்திய அமளியையும், கலவரத்தையும் அனைத்து மக்களும் தொலைக்காட்சி மூலம் காண முடிந்தது.

பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினர்களை ஆறு பகுதிகளாக பிரித்து தனித் தனியே அவர்களை எழுந்து நிற்கச் சொல்லி வாக்குகளைப் பதிவு நடத்தப்பட்டது. இதில் 122 வாக்குகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. 1952 ஜூலை 3 ஆம் தேதி மூதறிஞர் ராஜாஜி அமைச்சரவைக்கு நம்பிக்கை வாக்கு சட்டப்பேரவையில் நடைபெற்றபோதும், 1972 டிசம்பரில் முதல்வர் கருணாநிதி அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கின் போதும், 1988 ஜனவரி 28 ஆம் தேதி முதல்வர் ஜானகி அமைச்சரவை நம்பிக்கை வாக்கின்போதும் எத்தகைய முறை கடைப்பிடிக்கப்பட்டதோ, அதே முறையைத்தான் நேற்று சனிக்கிழமையன்றும் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கடைப்பிடித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு 1999 மார்ச்சில் நடைபெற்றபோது, ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக அரசு தோற்றுப்போனது. இந்த வாக்கெடுப்பில் நானும் பங்கேற்றேன்.

நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு என்பதே கிடையாது. சட்டங்களை நிறைவேற்றும்போது பெரும்பாலும் குரல் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை உறுதி செய்யப்படும். யாராவது ஒரு உறுப்பினர் எழுந்து குரல் வாக்கெடுப்பு கூடாது, டிவிசன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், அவைத் தலைவர் நிராகரிக்கக்கூடாது என்பது இதுவரை பின்பற்றப்படும் மரபாகும்.

எனவே, நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டப்பேரவையிலும் ரகசிய வாக்கெடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனை நல்லறிவாளர்களும், கற்றோரும், அரசியலில் அக்கறை உள்வர்களும், தமிழக மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார் வைகோ.

மேலும், சபாநாயகர் தனபால் சட்டவிதிகள் அடிப்படையில் பாராட்டத்தக்க வகையில் வாக்கெடுப்பை நடத்தியுள்ளார் என்றும் வைகோ புகழ்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com