சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே ஜல்லிக்கட்டு விழாவை வேடிக்கைப் பார்க்கச் சென்ற சிறுவன் மாடு முட்டியதில் உயிரிழந்தார்.
கெங்கவல்லி அருகேயுள்ள கூடமலைப் பெருமாள் கோயில் தெருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆத்தூர், தலைவாசல், வீரகனூர்உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊர்களிலிருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இதில், தம்மம்பட்டி -ஆத்தூர் சாலையிலுள்ள கந்தசாமிபுதூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் மணிகண்டன் (17) மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அவரை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, காளைகள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டன. ஜல்லிக்கட்டில் மணிகண்டன் உயிரிழந்தது குறித்து, அவரது தாய் ராஜகுமாரி கெங்கவல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் 16 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.