தனுஷ்கோடி பகுதியில், சனிக்கிழமை மட்டும் 614 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்துள்ளனர். மேலும், ஏற்கெனவே சேகரித்த முட்டைகளில் இருந்து பொறித்த 96 குஞ்சுகளை கடலில் விடுவித்தனர்.
ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய கடற்கரைப் பகுதிகளில் கடல் ஆமைகள் முட்டையிடுகின்றன. இவற்றை மற்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் வனத்துறையினர் கைப்பற்றி, அரிச்சல்முனைப் பகுதியில் பாதுகாப்பான இடத்தில் மணலில் புதைத்து வைத்து குஞ்சு பொறிக்க வைக்கின்றனர். அந்த முட்டைகளில் இருந்து குஞ்சு பொறித்த பின்பு அவற்றை கடலில் விட்டு விடுகின்றனர்.
சனிக்கிழமை காலை தனுஷ்கோடி அருகில் அரிச்சல் முனை கடற்கரை மணலில் ஆமைகள் முட்டையிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மண்டபம் வனச்சரகர் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று ஆமை முட்டைகளை சேகரித்தனர். மொத்தம் 614 முட்டைகள் இருந்தன. அவற்றைக் கைப்பற்றி அரிச்சல்முனை குஞ்சு பொறிப்பகத்தில் வைத்தனர்.
இதற்கிடையே, ஏற்கெனவே சேகரித்து வைத்திருந்த 96 முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பொறித்து இருந்தன. அந்த குஞ்சுகளை அதிகாரிகள் சனிக்கிழமை தனுஷ்கோடி கடலுக்குள் விடுவித்தனர். இப்பகுதியில், இதுவரை மொத்தம் 4,448 கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, கடல் ஆமைகளைப் போலவை மணலைத் தோண்டி அவற்றின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப குஞ்சு பொறிக்க வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.