கோவை: தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு மத்திய அரசே காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவை அருகே சின்னியம்பாளையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் வட்டார மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேசியதாவது:
2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக தலைமையிலான மத்திய அரசே தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு காரணம். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர்களுக்கு இல்லை.
முதல்வர் பொறுப்பு என்பது மலர் கீரிடம் அல்ல அவை முட்கீரிடம் ஆகும். தமிழக சட்டப் பேரவையில் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்து தான் பொறுப்பில் நீட்டிக்க முடியும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்களது உடல் வலிமை காட்டுவதற்கு பதிலாக, அவர்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள வாக்கு உரிமையை மட்டுமே பயன்படுத்தி இருக்க வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு இல்லாமால் எப்படி வாக்கெடுப்பு நடத்தி இருந்தாலும் அந்தந்தக் கட்சிக்கு உள்ள பலம் தான் நிருபீக்கப்பட்டு இருக்கும்.
மேலும் எதிர்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என்பதை ஏற்க முடியாது. தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நலனை தவிர தனக்கு எதுவும் இல்லை என்ற நற்பெயர் எடுக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருக்க வேண்டும்.
மக்களை திருப்தி படுத்தும் வகையில் அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.