திருவள்ளூர் அருகே 4 ஆண்டுகளுக்கு முன், திறக்கப்பட்ட ரேஷன் கடை கட்டடம், இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை.
திருவள்ளூரை அடுத்த பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உள்பட்டது வயலாநல்லூர் ஊராட்சி. இந்த ஊராட்சியைச் சேர்ந்த கொத்தபாளையம், சத்திரம் கிராம மக்கள் 3 கி.மீ. தொலைவில் உள்ள கோலப்பன்சேரி ரேஷன் கடைக்குச் சென்று அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வந்தனர். இதனால், மிகவும் அவதிப்பட்ட இப்பகுதி மக்களின் சிரமத்தைப் போக்க, கடந்த 2012-ஆம் ஆண்டு, ரூ. 5 லட்சம் மதிப்பில் வயலாநல்லூரில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது.
இந்தக் கடையை 2013-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் அப்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணா திறந்து வைத்தார். இந்நிலையில், திறப்பு
விழா கண்டு, நான்கு ஆண்டுகளாகியும், பயன்பாட்டுக்கு வராத ரேஷன் கடை கட்டடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. மேலும், இந்தக் கட்டடத்தின் தரைத்தளம், கதவு, ஜன்னல்கள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, வயலாநல்லூர் ரேஷன் கடை கட்டடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.