பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
பருவ மழை பொய்த்ததால் மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி ஆகியவற்றில் நீர்வரத்து குறைந்து காண்பட்டது. இந்நிலையில் அண்மையில் பெய்த மழையால் இந்த அருவிகளுக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது. அத்துடன் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் இரண்டு அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது.
இந்த அருவிகளுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. மணிமுத்தாறு அருவியின் பிரதான பகுதியில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டதால், அருவியின் மேற்குப் பகுதியிலுள்ள சிறிய அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்தனர்.
அணைகளுக்கு நீர்வரத்து: ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 106.25 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 121 கனஅடி நீர்வரத்து இருந்தது. குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 104.75 கனஅடி, மணிமுத்தாறு அணையில் இருந்து 125 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
நீர்மட்டம்: பாபநாசம் அணை 53.40 அடி, சேர்வலாறு அணை 74.44 அடி, மணிமுத்தாறு அணை 49.35 அடி, கடனாநதி அணை 60.80 அடி, ராமநதி அணை 45.13 அடி, கருப்பாநதி அணை 46.51 அடி, அடவிநயினார் அணை 61.50 அடி, கொடுமுடியாறு அணை 14.25 அடி, குண்டாறு அணை 21.25 அடி, நம்பியாறு அணை 8.82 அடி, வடக்குப் பச்சையாறு அணை 3.25 அடி.