மக்களின் கருத்தை அறிந்த பின்னர், வாக்கெடுப்பு நடத்துவதே ஜனநாயகப் பூர்வமாக இருக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சட்டப் பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற விவாதம்:-
ஓ.பன்னீர்செல்வம்: 15 நாள்களாக நடைபெறும் பிரச்னைகளை அறிவீர்கள்.
பேரவைத் தலைவர் பி.தனபால்: கவனத்துக்கு வரும் பிரச்னைகள் பற்றி மட்டுமே நடவடிக்கை எடுப்பேன்.
ஓ.பன்னீர்செல்வம்: கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்து அராஜகம் செய்தனர். அதில், கோவை வடக்கு எம்எல்ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார், "தப்பித்தோம், பிழைத்தோம்' என வெளியேறினார்.
தனபால்: வெளியில் நடக்கும் சம்பவங்களை பேரவையில் விவாதமாக்கக் கூடாது. எம்எல்ஏக்களின் பாதுகாப்பு குறித்து சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கள். அரசியல் விவகாரங்களைச் சொல்ல எந்த விளக்கமும், பதிலும் இல்லை.
ஓ.பன்னீர்செல்வம்: உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பேரவைத் தலைவரிடம் சொல்லி பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அருண்குமார் என்னிடம் (பன்னீர்செல்வம்) கேட்டுக் கொண்டார். எம்எல்ஏக்களை 15 நாள்கள் அடைத்து வைக்கக் காரணம் என்ன? அவர்களை அடைத்து வைத்து, அவர்களது நியாயமான கடமைகளைச் செய்ய விடாமல், 4 பேருந்துகளில் இப்போது இறக்கி விட்டுள்ளனர்.
மக்கள் பிரச்னைகளை எதிரொலிக்கவே சட்டப் பேரவைக்கு வருகிறோம். எனவே, எம்எல்ஏக்களுக்கு 4 அல்லது 5 நாள்கள் அவகாசம் கொடுத்து அதன் பின்பு அவர்களை திரும்பி வரச் சொல்லி வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இப்போது நடத்துவதாக இருந்தால், ரகசிய வாக்கெடுப்பாக நடத்த உத்தரவிட வேண்டுóம்.
எதிர்க்கட்சிகளும் ஆதரவு: ரகசிய வாக்கெடுப்பு என சில முறை ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இதே கருத்துகளை திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் வலியுறுத்தினர்.