கோவை அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் காரணமாக இருவர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனர்.
கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா (36). இவர் கடந்த சில நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த பரிமளா வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் (56) என்பவர், நெஞ்சுவலியால் சில நாள்களுக்கு முன்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனையில் அவருக்கு மூளைக் காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சையில் இருந்த மைக்கேல்ராஜ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இந்த இருவரும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
டெங்கு, பன்றி காய்ச்சல்-27 பேர் அனுமதி: கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேர், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15
பேர் என மொத்தம் 27 பேர் தனி அறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல், சாதாரண காய்ச்சலுக்கு 56 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.