சென்னை மெரீனாவில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ஸ்டாலின் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பேரவை சனிக்கிழமை தொடங்கியதும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு கோரினர். இதற்கு பேரவைத் தலைவர் தனபால் அனுமதி மறுத்தார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதோடு சபாநாயகரின் மைக்கும் உடைக்கப்பட்டது.
இதையடுத்து திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். திமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வலுக்கட்டாயமாக அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
அப்போது ஸ்டாலின் உள்ளிட்டோர் அவைக்காவலர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
திமுகவினர் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்கக்கோரியும் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் ஆளுநரை சந்தித்துவிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர். பின்னர் அனைவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மெரீனா கடற்கரையில் சட்டவிரோதமாக கூடியது, தடைசெய்யப்பட்ட பகுதியில் போராட்டம் நடத்தியது போன்ற பிரிவுகளின் கீழ் ஸ்டாலின் உள்ளிட்ட 2 ஆயிரம் திமுகவினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.