கூவாத்தூரில் பாதுகாப்பு தரும் நிலையில் தான் காவல்துறை இருந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின்

கூவாத்தூரில் பாதுகாப்பு தரும் நிலையில் தான் காவல்துறை இருந்து கொண்டிருக்கிறது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கூவாத்தூரில் பாதுகாப்பு தரும் நிலையில் தான் காவல்துறை இருந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின்

கூவாத்தூரில் பாதுகாப்பு தரும் நிலையில் தான் காவல்துறை இருந்து கொண்டிருக்கிறது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

எண்ணூர் மீனவக் குடியிருப்பைச் சேர்ந்த ரித்திகா என்ற 3 வயது சிறுமி கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டதை அறிந்து இன்று திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய விவரம் பின்வருமாறு:
எண்ணூர் பகுதியில் ரித்திகா என்ற 3 வயது சிறுமி கொடூரமான முறையிலே கொலை செய்யப்பட்டார். அந்தக் குழந்தையின்  குடும்பத்தை நேரிலே சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக வந்திருக்கின்றோம். இந்த ஆட்சியிலே சட்டம்-ஒழுங்கு எந்தளவிற்கு ஒரு மோசமான நிலையில் இருக்கின்றது என்பதற்கு இவைகளெல்லாம் இன்றைக்கு சாட்சிகளாக இருந்து கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அதையும் தாண்டி சொல்ல வேண்டுமெனச் சொன்னால் சிறுமிகளுக்கு இன்றைக்கு மிகப்பெரிய கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக அரியலூர் பகுதியிலே நந்தினி என்ற பெண் கற்பழிக்கப்பட்டு அந்தக் கருவை சிதைத்து கொலை செய்திருக்கும் கொடுமை நடந்திருக்கின்றது, அதைத் தொடர்ந்து போரூரிலே ஹாசினி என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட கொடுமை, இப்பொழுது எண்ணூர் பகுதியிலே 3 வயது சிறுமி ரித்திகா கொடுமையான முறையிலே கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.

இந்த கொடுமைகளை எல்லாம் தட்டிக் கேட்பதற்கு, சட்டம் ஒழுங்கு பேணிப் பாதுகாக்கும் நிலையில் இருக்கும் காவல்துறை கூவாத்தூரில் பாதுகாப்பு தரும் நிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறது. அதேபோல நேற்றைய முன்தினம் தலைமைச் செயலகத்திலே அவர்கள் வாக்கெடுப்பை நிறைவேற்றிக் கொள்ள அடியாட்களை வைத்து எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்திற்குள் அடித்து வெளியில் தூக்கிப் போடுவதற்கு தான் காவல்துறையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர,  இதுபோன்ற சட்டம் ஒழுங்கை பாதுகாக்கிற, பெண்களுக்கு பாதுகாப்பு தருகின்ற நிலையில் இந்தக் காவல்துறை இல்லை என்பது இந்த ஆட்சியில் வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
 
கேள்வி: இன்றைக்கு முதல்வர் 5 திட்டங்களுக்கு கோப்புகளில் கையெழுத்து போட்டிருக்கிறார். முக்கியமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவு போட்டிருக்கிறாரே?
 
பதில்: அவர் எத்தனை கையெழுத்து வேண்டுமென்றாலும் போடட்டும். நான் கேட்பது இதுபோன்ற சிறுமிகள் பாதுகாப்பில், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பிற்காக பல அம்ச திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார்கள். இப்பொழுது அவர் என்னதான் கோப்புகளில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தாலும் தொடர்ந்து பெண்கள், சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்படும் கொடுமை நடந்துக் கொண்டிருக்கிறது. இதை தடுக்கும் முயற்சியிலே முதலமைச்சராக இருக்கும் பழனிச்சாமி ஈடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com