சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த நிகழ்வுகள் மற்றும் வாக்கெடுப்பு நடந்த விதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டப்பேரவைச் செயலருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 122 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்தார்.
இந்த நிலையில், தமிழக ஆளுநரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது என வலியுறுத்தினர். இதுபோல் நாடாளுமன்ற திமுக உறுப்பினர்களும் ஆளுநரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து புகார் அளித்தனர். முன்னதாக, சனிக்கிழமையன்று எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலினும் ஆளுநரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகார்களைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டப் பேரவையில் நடந்த சம்பவங்கள் குறித்து அறிக்கையாகச் சமர்ப்பிக்குமாறு பேரவைச் செயலர் ஜமாலுதீனை, ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக்கொண்டிருப்பதாக ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த அறிக்கை கிடைத்த பின்னரே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபித்திருப்பதை ஏற்பதா அல்லது வேண்டாமா என்பதை ஆளுநர் முடிவு செய்வார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.