மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்த நாள் விழா வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
இவ்விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பகுதி, நகரம், ஒன்றியம், கிளைக் கழகங்களின் சார்பில் கழகக் கொடியேற்றி வைத்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களையும், அன்னதானமும் வழங்கி ஜெயலலிதாவுக்கு புகழ் சேர்க்க வேண்டும்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, ஜெயலலிதா பேரவை, அண்ணா தொழிற்சங்கம், வழக்குரைஞர் பிரிவு, சிறுபான்மையினர் பிரிவு உள்பட அனைத்து பிரிவு நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.