தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமுதாய நலச் சங்கக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரகசிய வாக்கெடுப்பு, இதுவரை எந்த சட்டப்பேரவையிலும் நடக்கவில்லை. ஆனால், கோரிக்கைகள் வைப்பது அவர்கள் விருப்பம். பேரவைத் தலைவர் அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது அவருடைய நிலை.
பொதுவாக, பேரவைத் தலைவர் இப்படிப்பட்ட சூழ்நிலையில் எல்லா தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை.
சட்டப்பேரவையில் இருதரப்பினரும் செய்திருக்கக் கூடிய தவறு, தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இரு கழகங்களின் நடைமுறைகளைப் பார்த்து மக்கள் தற்போது நம்பிக்கை இழந்து விட்டார்கள். திமுக, அதிமுகவால் தமிழக மக்களுக்கு இனி எந்தவித பயனும் கிடைக்காது என்பதை சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் உறுதியாக்கிவிட்டது. முதல்வர் அமர்ந்திருப்பது ஒரு வாடகை சேர் போன்றது. தமிழகத்தில் ஆட்சி நீடித்திருக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
தமிழக சட்டப்பேரவையில் மாணவர்களின் நலன் கருதி குறிப்பாக, நீட் தேர்வு குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்வு வரும்போது மட்டுமே நீட் தேர்வு குறித்து அரசியல் கட்சியினர் குரல் கொடுக்கிறார்கள். மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வியைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் அரசு, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கி வருகிறது என்றார் அவர்.
பேட்டியின் போது, பாஜக மாநிலச் செயலர் சீனிவாசன், மாவட்டத் தலைவர் பாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் சிவந்தி நாராயணன், பாலு, சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.