பிப்ரவரி 18ம் தேதி சட்டப்பேரவையில் நடந்தது என்ன?ஆளுநரிடம் அறிக்கை தாக்கல்

பிப்ரவரி 18ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த நிகழ்வுகள் மற்றும் வாக்கெடுப்பு நடந்த விதம் குறித்து ஆளுநரிடம் பேரவை செயலர் ஜமாலுதீன் இன்று அறிக்கை தாக்கல் செய்தார்.
பிப்ரவரி 18ம் தேதி சட்டப்பேரவையில் நடந்தது என்ன?ஆளுநரிடம் அறிக்கை தாக்கல்


சென்னை: பிப்ரவரி 18ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த நிகழ்வுகள் மற்றும் வாக்கெடுப்பு நடந்த விதம் குறித்து ஆளுநரிடம் பேரவை செயலர் ஜமாலுதீன் இன்று அறிக்கை தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன் இன்று ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று அறிக்கையை வழங்கினார்.

பிப்ரவரி 18ம் தேதி பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து அறிக்கையில் ஜமாலுதீன் விளக்கம் அளித்துள்ளார் என்று தெரிகிறது. சட்டப்பேரவை விடியோ காட்சிகளும் ஆளுநர் மாளிகையில் வழங்கப்பட்டன.

முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 122 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்தார்.

இந்த நிலையில், தமிழக ஆளுநரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது என வலியுறுத்தினர். இதுபோல் நாடாளுமன்ற திமுக உறுப்பினர்களும் ஆளுநரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து புகார் அளித்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுகவினர் தாக்கப்பட்டதாக ஆளுநரிடம் ஸ்டாலினும் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார்களைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டப் பேரவையில் நடந்த சம்பவங்கள் குறித்து அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு பேரவைச் செயலர் ஜமாலுதீனை, ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக்கொண்டார்.

இந்த அறிக்கையைப் பொறுத்தே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபித்திருப்பதை ஏற்பதா அல்லது வேண்டாமா என்பதை ஆளுநர் முடிவு செய்ய உள்ளார் என்று முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com