பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதியில் இருந்து சுமார் 2 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 11 டி.எம்.சி. ஆகும். இந்த ஏரிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 1.6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் வழங்கும் மற்றொரு ஏரியான வீராணம் ஏரி வறண்டுவிட்டது.
இந்த நிலையில், கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 21-ஆம் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது கண்டலேறு அணையில் இருந்து 1800 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த தண்ணீர், பூண்டி ஏரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 491 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி ஏரியின் நீரின் அளவு 24.94 அடியாக உள்ளது. தற்போது 837 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
ஜனவரி 21-ஆம் தேதி முதல் தற்போதுவரையிலான கால கட்டத்தில் பூண்டி ஏரிக்கு 1.91 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்து சேர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.