இதுவரை 9204 ஆலிவ் ரிட்லி கடலாமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் தமிழகக் கடலோரப் பகுதிக்கு ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் வந்து முட்டையிடுகின்றன. இந்த முட்டைகளைப் பாதுகாத்து சேகரிக்கும் பணியில் தமிழக வனத் துறையும், சில தன்னார்வலர்களும் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் சேகரிக்கப்படும் முட்டைகளுக்காக விஜிபி, திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் குஞ்சு பொரிக்கும் மையங்கள் வனத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள கடற்கரையில் முட்டைகளைச் சேகரித்து பாதுகாக்கும் பணியை வனத் துறையினருடன் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் இணைந்து ஜனவரியில் தொடங்கினர். இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை சேகரிப்புப் பணி நடைபெறுகிறது.
கடற்கரை மணல் பரப்பில் குழிதோண்டி இடப்படும் முட்டைகள், சுமார் 45 நாள்களுக்குப் பிறகு இயற்கையாகப் பொரிந்து குஞ்சுகள் வெளியேறி கடலுக்குள் சென்றுவிடும்.
நாய், நரி போன்ற விலங்குகளாலும், சமூக விரோதிகளாலும் முட்டைகள் சேதமாக்கப்படுவதைக் கருத்தில்கொண்டு, முட்டைகள் பாதுகாக்கப்பட்டு, குஞ்சுகள் பொரிக்கச் செய்யப்படுகின்றன. இதனால், கடல் ஆமை இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மையங்களில் உள்ள முட்டைகளில் இருந்து 95 சதவீத குஞ்சுகள் பாதுகாப்பாக பொரிக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 குஞ்சுகள் பொரிக்கும். கடந்த ஆண்டில் மட்டும் 11,000 முட்டைகள் சேகரிக்கப்பட்டன.
இதுகுறித்து வனப் பாதுகாவலர் கீதாஞ்சலி கூறியதாவது:-
இந்த ஆண்டு தாமதமாகத்தான் ஆமைகள் முட்டையிட்டு வருகின்றன. சென்னையில் 8780 முட்டைகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 424 ஆலிவ் ரிட்லி முட்டைகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 32 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இந்த மாதம் மேலும் நூற்றுக்கணக்கான குஞ்சுகள் கடலில் விடப்படும் என்றார் அவர்.