கீழடி அகழ்வாய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அக் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட செய்தி: சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாய்வை தொடர மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இது பல்வேறு அமைப்புகளின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.
அங்கு மாநில அரசு ஒதுக்கியுள்ள இடத்தில் காட்சி அருங்காட்சியகம் அமைக்க உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, கீழடியில் புதைந்துள்ள வரலாற்று உண்மைகள் முழுமையாக வெளிவரும் வரை ஆய்வினைத் தொடர வேண்டும் எனவும் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.