கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர். மேலும், கோவை அரசு மருத்துவமனையில் 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை, சரவணம்பட்டி அருகிலுள்ள சின்ன மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் (35). இவர் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தீவிரக் காய்ச்சல், மூச்சுத் திணறல் பாதிப்பு காரணமாக, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஹனீபா (78), பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர், திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக அனுமதிக்கப்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் கடந்த 3 மாதங்களில் உயிரிழந்துள்ளனர்.
29 பேர் சிகிச்சை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், டெங்கு காய்ச்சலுக்காக 3 பேரும், சாதாரண காய்ச்சலுக்காக 60-க்கு மேற்பட்டோரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.