மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு வரும் 24-ஆம் தேதி அவரது திருவுருவப்படத்திற்கு, அவைத் தலைவர் செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்த நாளான 24-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு, அதிமுக அவைத் தலைவர் செங்கோட்டையன் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் 69-ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.