சென்னை: தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலைதான் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி இன்று அறிக்கை தாக்கல் செய்தது.
இளவரசன் மரணம் தொடர்பான வழக்கில், சிபிசிஐடியின் அறிக்கையை ஏற்று, வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
2013ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி ரயில் தண்டவாளத்தில் இளவரசன் உடல் கண்டெடுக்கப்பட்டது. இளவரசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது தந்தை இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இளவரசன் மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய நிலையில் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், இளவரசனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களின் அடிப்படையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக சிபிசிஐடி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து, இளவரசன் மரணம் தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் செல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த இரு வேறு பிரிவினரான திவ்யா - இளவரசன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.