பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
எண்ணூரில் படுகொலை செய்யப்பட்ட 3 வயது சிறுமி ரித்திகாவின் இல்லத்துக்கு திங்கள்கிழமை நேரில் சென்ற மு.க.ஸ்டாலின், சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் சாட்சிகள். குறிப்பாக, பெண்களுக்கும் சிறுமிகளுக்கு இன்றைக்கு மிகப்பெரிய கொடுமைகள் நடந்து வருகின்றன.
5 திட்டங்களுக்கான கோப்புகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார். பெண்களையும், சிறுமிகளையும் பாதுகாப்பதற்காக பல திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், பெண்களுக்கு எதிரான கொடுமை தொடர்கிறது. இதைத் தடுக்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி ஈடுபட வேண்டும் என்றார்.