கோவை கருமத்தம்பட்டி அருகே கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் 5 பேர் மீதான வழக்கு வரும் மார்ச் 7-ஆம் தேதிக்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.
கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷ், அவரது மனைவி ஷைனா, அனூப் மேத்யூ, கண்ணன், வீரமணி ஆகியோரை கியூ பிரிவு காவல் துறையினர் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் 4-ஆம் தேதி கைது செய்தனர்.இந்த 5 பேரின் மீதும் தேசதுரோகம், கூட்டுச்சதி, தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இவர்கள் மீதான வழக்கு கோவை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறையில் இருந்து ரூபேஷ், ஷைனா, அனூப் மேத்யூ, வீரமணி மற்றும் கண்ணன் ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர். இதையடுத்து. இந்த வழக்கின் மீதான விசாரணையை மார்ச் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி ஆர்.பொங்கியப்பன் உத்தரவிட்டார்.
மாவோயிஸ்டுகள் கோஷம்: இதனிடேயே, நீதிமன்ற வளாகத்துக்கு அழைத்து வரப்பட்ட போது மாவோயிஸ்டுகள் 4 பேரும் சட்டமன்றம் சாக்கடை, பாராளுமன்றம் பன்றிக் கூட்டம், மக்கள் பாதையே புரட்சிப்பாதை என்று கோஷங்களை எழுப்பியதால் ஒரு வித பரபரப்பு ஏற்பட்டது.