தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் மண் வளம் பாதிக்கப்படும். நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விவசாயம் முற்றிலும் அழியும் நிலை ஏற்படும்.
எனவே, காவிரி பாசனப் பகுதிகளில் ஆபத்தான எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது. தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை வலியுறுத்தி, இந்தத் திட்டத்தை கைவிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சிறுமி கொலைக்கு கண்டனம்: எண்ணூரில் ரித்திகா என்ற 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது கவலை அளிக்கிறது.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவும், காவல் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஜி.கே. வாசன்.