பழம் பெரும் திரைப்பட இயக்குநர் மித்ரதாஸ் (103) உடல் நலக்குறைவால் சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.
மதுரையை பூர்வீகமாக கொண்ட மித்ரதாஸ், அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தவர். 1942-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டு வரை நடந்த 2-வது உலகப்போரின் போது பிரிட்டீஷ் ராணுவத்தில் பணியாற்றிய மித்ரதாஸ், அதன் பின் திரைத் துறையில் நுழைந்தார். சென்னை அண்ணாநகரில் வாழ்ந்து வந்த இவர் வயது முதிர்வு காரணமாக திங்கள்கிழமை இரவு காலமானார். அவரது இறுதிச்சடங்கு சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது. காலமான மித்ரதாஸுக்கு மனைவி எலிசபெத், மகள் உஷா ஆகியோர் உள்ளனர்.