ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நிதியுதவி: தீவிரவாத தடுப்புப் பிரிவு மீண்டும் விசாரணை

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நிதியுதவி செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்த சென்னைக்கு மீண்டும் வந்துள்ளனர்.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நிதியுதவி செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்த சென்னைக்கு மீண்டும் வந்துள்ளனர்.
ராஜஸ்தானை சேர்ந்த ஜமீல் முகம்மது என்ற இளைஞரை, அந்த மாநிலத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை மயிலாப்பூர் பஜார் தெருவைச் சேர்ந்த முகம்மது இக்பால் என்பவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ரூ. 65 ஆயிரம் நிதியுதவி செய்திருப்பது தெரியவந்தது. அவரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சென்னை அருகே தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இக்பாலை கடந்த 6-ஆம் தேதி மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதையறிந்த ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் புழல் சிறையில் இருந்து இக்பாலை அண்மையில் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் சென்னையைச் சேர்ந்த மேலும் 4 பேர் ரூ. 3 லட்சம் நிதியுதவி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தமிழக போலீஸாருடன் இணைந்து அந்த 4 பேரையும் கைது செய்வதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதர்காக ஜெய்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இக்பாலை சென்னைக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வந்து, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை சென்னைக்கு வருகை தந்து, விசாரணை நடத்த உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com