தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை 75% சரிவு

வணிகர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட பிரசாரத்தின் விளைவாக தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை 75 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்
தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை 75% சரிவு

வணிகர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட பிரசாரத்தின் விளைவாக தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை 75 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வெளிநாட்டு குளிர்பானங்களை குடிக்கமாட்டோம் என மாணவர்கள், இளைஞர்கள் சூளுரைத்தனர். இதைத்தொடர்ந்து மார்ச் 1 -ஆம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்களை விற்கமாட்டோம் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்தது.
இதையடுத்து, கடந்த 4 வாரங்களில் 75 சதவீதம் அளவுக்கு பெப்சி, கோக் விற்பனை குறைந்துள்ளது. இந்த குளிர்பானங்களின் முகவர்கள், விற்பனையாளர்கள் கொண்டு வரும் சரக்குகளை தமிழக வணிகர்கள் புறக்கணித்து வருகின்றனர். வரும் மார்ச் 1 -ஆம் தேதிக்குள் தமிழகத்தில் எந்தக் கடைகளிலும் பெப்சி, கோக் விற்கப்படாது என நம்புகிறோம்.
நடிகர், நடிகைகளுக்கு: இந்த இரு குளிர்பான விளம்பரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை அதிலிருந்து விலகும்படி அறிவுறுத்துவோம். அது நடக்காதபட்சத்தில் இளைஞர்கள், மாணவர்களுடன் இணைந்து அதே கருத்தை தீவிரமாக வலியுறுத்துவோம்.
பதநீர்: உள்நாட்டு குளிர்பானங்களை தமிழகத்தில் விற்பனை செய்ய வேண்டும் என வட மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் எங்களை அணுகி வருகின்றனர். அவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். விரைவில் அனைத்து கடைகளிலும் பதநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
வாகன நிறுத்தம் வசதி இல்லை என்ற காரணத்துக்காக, தமிழகத்தில் அண்மையில் பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கான வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வணிகர்களை அழைத்துப் பேசி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக பெப்சி, கோக் விற்பனையை நிறுத்தவும், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் கடையடைப்பு நடத்தியதற்கும், ஜல்லிக்கட்டு போராட்ட குழுவைச் சேர்ந்த தேவராஜ், ஜலீல், கிரேஸ் பானு, காயத்ரி உள்ளிட்டோர் விக்கிரமராஜாவை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அப்போது வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகிகள் ஏ.எம்.சதக்கத்துல்லா, எஸ்.பெரியசாமி, பி.பாண்டியராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மே 5 -இல் மாநில மாநாடு
விழுப்புரத்தில் வரும் மே 5 -ஆம் தேதி நடைபெறவுள்ள வணிகர் தின மாநில மாநாட்டில் 10 லட்சம் வணிகர்கள் திரளாகக் கலந்துகொள்ள உள்ளனர். இதில் பங்கேற்க மத்திய, மாநில அமைச்சர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வரும் உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகள், வணிகர்களை பாதிக்கும் வகையில் உள்ளன. இதை எதிர்த்துப் போராடுவதே இந்த மாநாட்டின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com