தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலைதான்: உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவலையடுத்து வழக்கு முடித்துவைப்பு

தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலை தான் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இதையடுத்து, சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து இளவரசன் மரணம் குறித்து விசாரணை நடத்தக்
தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலைதான்: உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவலையடுத்து வழக்கு முடித்துவைப்பு

தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலை தான் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இதையடுத்து, சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து இளவரசன் மரணம் குறித்து விசாரணை நடத்தக் கோரிய வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், செல்லாங்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா- நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் ஆகிய இருவரும் காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டதால், அங்கு பெரும் வன்முறை வெடித்தது.
இதையடுத்து, திவ்யா தனது தாயுடன் இருக்க விரும்புவதாகக் கூறி, இளவரசனை பிரிந்து சென்று விட்டார். பின்னர் 2013 ஜூலை 4-இல், தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இளவரசன் உயிரிழந்து கிடந்தார்.
இந்த நிலையில், இளவரசனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, 2-ஆவது முறையாக அவரது உடலை பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரி, அவரது தந்தை இளங்கோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழுவை நியமித்து, இளவரசன் உடலை பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. ஆனால், வழக்கு விசாரணையில் எந்தவித முன்னேற்றம் இல்லை என்றும் ஆகையால், சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து இளவரசன் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட கோரியும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வானது 2016 நவம்பரில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியும், விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு (பொறுப்பு) தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளவரசன் மரணம் தற்கொலை தான் எனக் கூறி, சிபிசிஐடி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டில் அரூர் டிஎஸ்பி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும், மது அருந்திய நிலையில் ரயிலில் அடிபட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com