திருச்சியில் மு.க. ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் இன்று திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருச்சியில் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை 9 மாணிக்கு தொடங்கியது. இந்தப் போராட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி விசா, கே. என். நேரு உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் தமிழகத்தை பொறுத்தவரையில் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வள்ளுவர் கோட்டம் அருகிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான வாக்கெடுப்பு பிப்ரவரி 18-இல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை, ரகசிய வாக்கெடுப்பாக நடத்துமாறு திமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். இதை பேரவைத் தலைவர் பி.தனபால் ஏற்காததால், பேரவையில் ரகளை- அமளி நடைபெற்றன. எனினும், எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் பழனிசாமி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.