சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், ஸ்டாலின் தரப்பிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஸ்டாலின் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கேட்ட நீதிபதிகள், எம்எல்ஏக்களை யார் அடைத்து வைத்தது? விருப்பத்துக்கு மாறாக அடைத்து வைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், அதிமுக எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க வைத்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றும் கேட்டனர்.
அதோடு, இந்த வழக்கில் பன்னீர்செல்வத்தை எதற்காக எதிர் தரப்பினராக சேர்த்தீர்கள் என்று நீதிபதிகள் கேட்டதற்கு, அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு அவரும் காரணம் என்றும் திமுக தரப்பு தெரிவித்தது.
இதையடுத், பேரவை நிகழ்வுகளின் விடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு ஸ்டாலின் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், மதுரை கிளை நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.