கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த தபால் ஊழியர் உள்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
கோவை, பி.என்.புதூரைச் சேர்ந்தவர் தபால் ஊழியர் ஸ்ரீதர் (47). இவர் கடந்த 10 நாள்களுக்கு மேலாக காய்ச்சல், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீதர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கோவையை அடுத்த க.க.சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பகவதி (57). பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். கோவை உருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அசந்தா மேரி (47). பன்றிக் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தார்.
ஏற்கெனவே கோவை, சரவணம்பட்டி அருகிலுள்ள சின்ன மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் (35), கோவை தனியார் மருத்துவமனையிலும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஹனீபா (78), கோவை அரசு மருத்துவமனையிலும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 16-க்கும் மேற்பட்டோர் கோவை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் கடந்த 3 மாதங்களில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
34 பேருக்கு சிகிச்சை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.