பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், ராணுவத்தில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ராணுவ மையம் தொடங்கியது முதல் தற்போது வரையிலான விவரங்கள், மையத்துக்கு வருகை தந்துள்ள குடியரசுத் தலைவர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள், பயிற்சி முடித்துச் சென்று பல்வேறு நாடுகளில் ராணுவ சேவைக்காக விருது பெற்றவர்கள், விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதேபோல், தொடக்க காலத்தில் பாதுகாப்புக்காகப் பயன்படுத்திய ஒற்றைக்குழல் பீரங்கிகள் முதல் தற்போது பயன்படுத்தப்படும் 18 வகையான பீரங்கிகளும், குழல் துப்பாக்கிகள் முதல் நவீன துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், 20 வகையான பீரங்கிகள் இடம்பெறும் வகையில் அருங்காட்சியகத்தை விரிவுப்படுத்தும் பணியும் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-
ராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள் திறந்த வெளியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் பயன்படுத்தி வந்த பீரங்கிகள் அனைத்தையும் இடம்பெறச் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயிற்சி பெறுவோரும், மாணவர்களும் ராணுவத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும். இது ராணுவத்தில் சேர வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தும் என்றனர்.