பிரதமர் மோடி கோவை வருகை: வனப்பகுதியில் அதிரடிப் படையினர் தீவிர ரோந்து

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, கோவை மாவட்ட வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தைத் தடுக்க, நக்ஸல் தடுப்புப் பிரிவினர், சத்தியமங்கலம் அதிரடிப் படையினர் தீவிர

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, கோவை மாவட்ட வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தைத் தடுக்க, நக்ஸல் தடுப்புப் பிரிவினர், சத்தியமங்கலம் அதிரடிப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயரமுள்ள ஆதியோகி சிலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) நடைபெற உள்ளது. இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதனிடையே, பிரதமர் மோடி வருகையையொட்டி, தாணிக்கண்டி, சிறுவாணி மலை அடிவாரம், சின்னாற்று மலை, நரசீபுரம், கோவை குற்றாலம், வைதேகி நீர்வீழ்ச்சி, பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார், சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப் படையினர் 100 பேர் 10 குழுக்களாகப் பிரிந்து தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தையொட்டி, மாவோயிஸ்டுகள் நடமாட்டமுள்ள பகுதிகளான ஆனைகட்டி, பில்லூர், முள்ளி, பட்டி சாலை உள்ளிட்ட வனப் பகுதிகள், மலைக் கிராமங்களிலும் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலைப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வெளி நபர்களின் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்த விவரங்களையும் காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர்.
ஈஷாவில் காவல் கட்டுப்பாட்டு அறை: கோவை ஈஷா யோக மையத்தில் முக்கியப் பிரமுகர்களின் வருகைக்காக சிறிய அளவிலான காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை முதலே ஈஷா யோக மையம் காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஈஷா மையத்தில் மூன்று ஹெலிகாப்டர்கள் இறங்கும் வகையில் ஹெலிபேட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஆலாந்துறை, பேரூர், நரசீபுரம், தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் மாவட்ட காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பூண்டி வெள்ளிங்கிரி கோயிலில் 200 காவல் துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எஸ்பிஜி அதிகாரிகள் ஆய்வு: பிரதமரின் பாதுகாப்புப் படை ஐ.ஜி. பியூஸ் பாண்டே தலைமையிலான சிறப்புப் படை அதிகாரிகள் 19 பேர் கோவைக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர். அவர்கள் ஈஷா யோக மையத்துக்குச் சென்று அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக காவல் துறை உயரதிகாரிகளும் கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com