அரசின் மீதான அதிருப்தி உள்ளாட்சி தேர்தலில் தெரியும்: ஸ்டாலின் பேட்டி
சென்னை: தமிழக அரசின் மீதான பொதுமக்களின் அதிருப்தி வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தெரியும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18-ஆம் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்பொழுது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புகார் அளிப்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கிறார். அதற்காக புதுதில்லி செல்வதற்காக புறப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:
சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலை தொடர்பான விபரங்களை எடுத்துரைக்கும் பொருட்டு இன்று மாலை ஜனாதிபதியை சந்திக்க இருக்கிறேன். தமிழகத்தில் தற்பொழுது நடைபெற்றுவரும் இந்த பினாமி அரசின் மீது மக்களுக்கு பெரிய அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்தி விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.