திருத்தணியில் கடும் பனிப்பொழி நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
திருத்தணியில் கடந்த சில நாள்களாக கடுமையான பனிப் பொழிவு காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் காலை நேரத்தில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருத்தணி-சித்தூர், திருப்பதி-சென்னை, திருத்தணி-காஞ்சிபுரம் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. அதேபோல திருத்தணி முருகன் மலைக்கோயில் அருகேயும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
காலை 9 மணி வரையிலும் பனிமூட்டம் நிலவுவதால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர்.
மார்கழி, தை மாதங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுவது வழக்கம். ஆனால் தற்போது மாசி மாதம் தொடங்கிய நிலையில், பனிமூட்டம் தொடர்ந்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல அதிக பனிமூட்டம் நீடித்தால், மழையளவு குறைய வாய்ப்புள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.