சென்னை பரங்கிமலை அருகே மின்சார ரயிலில் இருந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டிலிருந்து, சென்னை கடற்கரைக்கு இன்று காலை மின்சார விரைவு ரயில் வழக்கம்போல் சென்றுகொண்டிருந்தது. அப்போது ரயில் பரங்கிமலை -பழவந்தாங்கல் இடையே வந்தபோது தொங்கிக்கொண்டு சென்ற பயணிகள் திடீரென கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் பெருகளத்தூரைச் சேர்ந்த பிரவீன் ஆவார்.
விபத்தையடுத்து அப்பகுதியில் ரயில் சேவை சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் பயணிகள் தொங்கிக்கொண்டு சென்றபோது அவர்கள் மீது மின்கம்பம் மோதியதில் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.