நெடுவாசல்: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது.
நெடுவாசல் மக்கள் நூற்றுக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு அனுமதி அளித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நீர் வளம் பாதிக்கப்படும், விவசாயம் அழியும் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நெடுவாசல் மக்கள் அனைவரும், புதுக்கோட்டையில் வரும் 26ம் தேதி தாலுகா அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், அதில் மாணவர்களும் இளைஞர்களும் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல, விவசாயத்தையே அழிக்க முயலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொதுமக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.