பேரவைச் சம்பவம்: பிரணாப், மோடிக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர்

தமிழக சட்டப்பேரவையில் கடந்த சனிக்கிழமை (பிப்.18) நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு ஆளுநர் வித்யா

தமிழக சட்டப்பேரவையில் கடந்த சனிக்கிழமை (பிப்.18) நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சனிக்கிழமை (பிப்.18) கொண்டு வந்தார். நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பேரவையில் திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது நாற்காலிகள், மைக்குகள் உடைக்கப்பட்டன. சட்டப்பேரவை தொடர்ந்து இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியில் சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுமாறு பேரவை காவலர்களுக்கு பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார்.
பிறகு நம்பிக்கை தீர்மானத்தின் மீது எண்ணிக்கை கணக்கெடுப்பு முறையின்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், தீர்மானத்துக்கு ஆதரவாக 122 பேரவை உறுப்பினர்களும், 11 பேர் எதிர்த்தும் (ஓபிஎஸ் அணியினர்) வாக்களித்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றது.
ஆளுநரிடம் புகார்: இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர், திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை தனித்தனியே ஞாயிற்றுக்கிழமை (பிப்.20) சந்தித்து பேரவைச் சம்பவம் குறித்து விவரித்தனர்.
அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் தாம் வெற்றி பெற்றதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்து ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் கோரிக்கை வைத்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று திமுக குழுவினர் ஆளுநரிடம் வலியுறுத்தினர்.
பேரவைச் செயலர் அறிக்கை: இதையடுத்து சட்டப்பேரவை சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு பேரவைச் செயலர் ஜமாலுதீனை ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டார். அதன்படி பேரவைச் சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை ஆளுநரிடம் பேரவைச் செயலர் ஜமாலுதீன் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com