சென்னை: எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க ரூ.15 கோடியை முதல்வர் பழனிசாமி ஒதுக்கியுள்ளார்.
எண்ணெய் கசிவால் மீன்பிடிக்க முடியாமல் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் பழனிசாமி அறிவித்தார்.
ரூ.75 லட்சம் மதிப்பில் எர்ணாவூர் மற்றும் நொச்சிக்குப்பத்தில் மீன் சந்தைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சென்னைக்கு அருகே கடலில் இரண்டு சரக்குக் கப்பல்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், கடலில் எண்ணெய் கசிவு கலந்து மிகப்பெரிய மாசுபாட்டை ஏற்படுத்தியது இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
இது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இது தாற்காலிக நிவாரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.