சென்னை: ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியிருக்கின்ற அதிமுகவை மீட்பதே எங்கள் தர்ம யுத்தமென்று ஆர்.கே நகரின் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில் ஜெயலலிதாவின் தொகுதியயான ஆர்.கே.நகரில் நடைபெறும் விழாவில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். ஜெயலலிதாவின் ப டத்திற்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். அந்த நிகழ்வில் அவர் தெரிவித்ததாவது:
திராவிட இயக்க வரலாற்றில் அழிக்க முடியாத தலைவராக ஜெயலலிதா விளங்குகிறார். தன்னுடைய பிறந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கூறியவர் அவர். ஆனால் இன்று அவருடைய விருப்பத்திற்கு மாறான விஷயங்கள் கட்சியில் நடக்கின்றன.
அதிமுக என்னும் மக்கள் இயக்கத்தை யாரும் ஓன்றும் செய்ய இயலாது.கண்டிப்பாக ஜெயலலிதாவின்மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும். .
கட்சியும் சரி, ஆட்சியம் சரி ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்துக்குள் சென்று விட்டன. அந்த குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுகவை மீட்பதே நாங்கள் மேற்கொள்ளும் தர்ம யுத்தமாக இருக்கும். உலகமெங்கும் தர்ம யுத்தங்கள் வெற்றி பெற்றதாகத்தான் வரலாறு இருக்கிறது. நாங்களும் இந்த தர்ம யுத்தத்தின் இறுதியில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அவருடன் முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன், கே.பி.முனுசாமி,பொன்னையன், பி.ஹெச்.பாண்டியன், மாநிலங்களவை உறுபினர் மைத்ரேயன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிமுகவின் தலைமை நிலைய பேச்சாளர்களில் ஒருவரான பாத்திமா பாபு பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். மேலும் மதிமுகவில் இருந்து விலகி 1000-க்கு மேற்பட்டோரும் அவரது அணியில் இணைந்தனர்.