தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்: வலைகள், மீன்கள் பறிப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் நாகை மீனவர்களிடமிருந்து வலைகள், மீன்களை இலங்கை மீனவர்கள்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் நாகை மீனவர்களிடமிருந்து வலைகள், மீன்களை இலங்கை மீனவர்கள் பறித்துக்கொண்டு விரட்டியடித்துள்ளனர்.
நாகப்பட்டினத்தை அடுத்த பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தாற்காலிகமாக தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களில், 9 பேர் புதன்கிழமை பகல் கோடியக்கரை மீன்பிடி படகுத் துறையிலிருந்து இரண்டு கண்ணாடி இழைப் படகுகளில் கடலுக்கு சென்றனர்.
ஒரு படகில், பெருமாள்பேட்டை அ. சின்னையன் (52), இவரது மகன் வினோத், இதே பகுதியைச் சேர்ந்த ராசேந்திரன், ஆண்டவர் ஆகிய நால்வரும், மற்றொரு படகில் இதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (36), ஜெயபால், கார்த்திகேசன் (28), ர. குருமூர்த்தி (20), கு. பிரகாஷ் (23) ஆகிய 5 பேரும் இருந்துள்ளனர்.
இவ்விரு படகுகளில் சென்ற மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே அன்று முன்னிரவு மீன் பிடிக்க ஆயத்தமாகினராம். அப்போது, அங்கு 10 படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் எனக் கருதப்படும் ஒரு கும்பல், நாகை மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து மீனவர்களை தாக்கி அச்சுறுத்தினராம்.
பன்னீர்செல்வத்துக்குச் சொந்தமான படகில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ வலை, சின்னையன் படகில் இருந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 800 கிலோ எடையுள்ள வலை, ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை அவர்கள் பறித்துக்கொண்டு விரட்டியடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நாகை மீனவர்கள் வியாழக்கிழமை காலை கோடியக்கரையில் கரை சேர்ந்தனர். சுற்றி வளைத்த இலங்கை படகுகளில் ஒன்றில் ஏ. 4119 ஜெஎப்என் எனவும், மற்றொன்றில் ஏ 4385 ஜெஎப்என் எனவும் எழுதப்பட்டிருந்ததாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். இவர்களிடம் தனிப்பிரிவு போலீஸார் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com