தமிழகத்துக்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: அதிமுகவினருக்கு வி.கே.சசிகலா கடிதம்

தமிழக மக்களுக்கான நலத் திட்டங்களை அதிமுக தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: அதிமுகவினருக்கு வி.கே.சசிகலா கடிதம்

தமிழக மக்களுக்கான நலத் திட்டங்களை அதிமுக தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த தினத்தை ஒட்டி, அதிமுகவினருக்கு அவர் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதம்:
ஒவ்வொரு ஆண்டும் நாம் அனைவரும் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்த இந்த இனிய நாள், இந்த ஆண்டு இத்தனை சோதனை மிகுந்ததாக அமைந்திடும் என்று நாம் ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனாலும், காலத்தின் சுழற்சியில் இத்தகைய ஒரு வேதனையை நாம் சந்தித்துத் தீர வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டது.
எத்தனை துயர் வந்தாலும், எத்தனை இடர் வந்தாலும் அவற்றை எதிர்த்து நின்று துணிவுடன் போராடி, தனது மதிநுட்பத்தால் வென்று காட்டும் வாழ்க்கையை வாழ்ந்து நமக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கியவர் ஜெயலலிதா.
ன்று அ.தி.மு.க.வுக்கும், கட்சியினர் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும் இடர்மிகு சூழலை வெற்றி காண்பதுதான் ஜெயலலிதாவுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்.
தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வு என்றும் தான் வாழ்வதே மக்களுக்காகத்தான் என்றும் மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்றும் சித்தரித்து, நம்மிடையே வாழ்ந்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் நினைவே...: இந்த நாளில் ஜெயலலிதா நம்மோடு இல்லையே என்ற எண்ணம் என்னை மென்மேலும் துயரத்திற்கு உள்ளாக்குகிறது. 33 ஆண்டுகள் அவருடைய பிறந்தநாளை அவர் கூடவே இருந்து கொண்டாடிய நான், இந்த ஆண்டு அவர் நினைவாக தனிமையில் துயருற்று இருக்கிறேன். ஜெயலலிதாவின் நினைவே நிரம்பி இருக்கிறது.
மகத்தான மக்கள் தலைவர் அவர். ஒரு நொடி சந்தித்தவர்கூட வாழ்நாள் முழுவதும் அவரை நினைத்திருப்பர். அத்தகைய ஆளுமையும், கள்ளமில்லா வெள்ளை உள்ளமும் படைத்த வள்ளலின் வாரிசு. காலமெல்லாம் அவரது புகழ் பாடியபடி நம்முடைய வாழ்நாள் இருந்திட வேண்டும் என்றுதான் நான் ஒவ்வொரு நொடியும் நினைக்கிறேன். அவரது அன்பையும், பாசத்தையும், உழைப்பையும் எண்ணி, எண்ணி வேதனைக் கண்ணீர் வடிக்கிறேன். எதிரிகளும், துரோகிகளும் அ.தி.மு.க.வையும், அரசையும் வீழ்த்த நினைத்த நேரத்தில், ஜெயலலிதாவின் ஆன்மா நம்மோடு கூட இருந்து நம்மை வழிநடத்தி, அரசை நிலை நிறுத்தி இருக்கிறது. இந்த அரசு, தமிழக மக்களுக்காக மென்மேலும் நிறைவேற்ற நினைத்திருந்த திட்டங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி, மக்கள் வாழ்வில் ஒளியேற்றும்.
இந்த பிறந்ததினத்தில், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள் இயன்ற இடங்களில் எல்லாம் அறுசுவை உணவுகளை அன்னதானமாகச் செய்யுங்கள். கட்சிக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கட்டும். கட்சியினர் வாழும் இடங்களில் எல்லாம் ஜெயலலிதாவின் உருவப் படங்களை அழகுற பொதுமக்கள் பார்வைக்கு வைத்து மலர் அஞ்சலி செலுத்துங்கள் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com