நாட்டு வெடிகளை சேகரித்து கொளுத்தியபோது விபத்து: மாணவர் சாவு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வியாழக்கிழமை மாலை வெடி விபத்தில் தீக்காயமடைந்த பள்ளி மாணவர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வியாழக்கிழமை மாலை வெடி விபத்தில் தீக்காயமடைந்த பள்ளி மாணவர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்தார்.
பாபநாசம் அருகேயுள்ள சிவாலயம் முல்லை நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். பந்தல் போடும் தொழிலாளி. இவரது மகன் கீர்த்திகேயன் (8), பாபநாசம் 108 சிவாலயம், தோப்பு தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மகன் யாதேஷ் (7).
கீர்த்திகேயன், யாதேஷ் ஆகியோர் வங்காரம்பேட்டை தொடக்கப் பள்ளியில் முறையே, மூன்றாம் வகுப்பும், இரண்டாம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில், கீர்த்திகேயன், யாதேஷ் இருவரும் வியாழக்கிழமை மாலை வீட்டுக்கு அருகிலுள்ள குடமுருட்டி ஆற்றுக்கு விளையாட சென்றனர். அப்போது, அங்கு சாலையோரத்தில் வெடிக்காமல் கிடந்த நாட்டு (சணல்) வெடிகளை சேகரித்து, வெடிகளை ஆற்று மணலில் பள்ளம் தோண்டி அதில் சேகரித்த வெடிகளை கொட்டி தீ மூட்டினராம். அப்போது சில வெடிகளில் இருந்த வெடி மருந்து திடீரென தீப்பற்றியுள்ளது. இதில் கீர்த்திகேயன், யாதேஷ் இருவரும் காயமடைந்தனராம்.
இதை கண்ட அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள், அவர்கள் இருவரையும் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் கீர்த்திகேயன் உயிரிழந்தார். யாதேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரெத்தினவேல், பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வராஜ், ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பாபநாசம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com