மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 69-வது பிறந்த நாள் விழா இன்று புதுச்சேரியில் கொண்டாடப்பட்டது.
மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு அவைத் தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை கட்சித் தலைவர் ஆ.அன்பழகன், எம்.எல்.ஏக்கள் ஆ.பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின், ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் ஏழை, எளியோர் நூற்றுக்கணக்கானோருக்கு தையல், இயந்திரம், புடவைகள் உள்பட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் எம்.பி. ராமதாஸ், மாநில நிர்வாகிகள் பன்னீர்செல்வி, சுத்துக்கேணி பாஸ்கர், நகர செயலாளர்கள் அன்பானந்தம், ரவீந்திரன், நிர்வாகிகள் பாப்புசாமி, அந்துவான் சூசை, தொகுதி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜெ. சிலைக்கு அடிக்கல் நாட்டல்
மேலும் கட்சித் தலைமை அலுவலகத்தில் புதிதாக ஜெயலலிதாவின் முழு உருவ சிலை நிறுவ அடிக்கல் நாட்டப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் அனுமதியோடு திருவுருவ சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சிலையின் உயரம் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். விரைவில் சிலை அமைக்கும் பணி முடிவடையும் என அன்பழகன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.