மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது பிறந்த நாள் மலர் இன்று வெளியிடப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69ஆவது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் கட்சித் தலைமை அலுவகத்தில் அவைத் தலைவரும், அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா படத்துக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் ஜெயலலிதா பிறந்த நாள் மலரை கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட பொள்ளாச்சி ஜெயராமன் பெற்றுக் கொண்டார். அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.