ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது அலங்காநல்லூரில் நடத்தப்பட்ட தடியடி உள்ளிட்ட 3 வழக்குகளின் விசாரணை, சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் இயற்றக் கோரி, கடந்த ஜனவரியில் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, தமிழக அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றியது. அதன் பிறகும் போராட்டத்தைக் கைவிட மறுத்த நிலையில், அலங்காநல்லூரில் ஜனவரி 23ஆம் தேதி போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
அப்போது, வன்முறையில் ஈடுபட்டதாக 70-க்கும் மேற்பட்டோர் மீது அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவ இடத்தில் இருந்த 40 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வாகனங்களை சேதப்படுத்தியோர் மீதும், சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்து பதிவிட்டோர் மீதும் அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த மூன்று வழக்குகளின் விசாரணைகளையும் சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டார். இதன்படி வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி-க்கு அலங்காநல்லூர் போலீஸார் வழங்கினர்.